Sunday, May 27, 2018

பறவைகளின் பாட்டு



                                
பறவைகள் வானில் பறந்திடுமே
பாடல்கள் இனிதே பாடிடுமே
பாடும் ஒவ்வொரு பாட்டினிலும்
பற்பல பொருள்கள் இருந்திடுமே

பேடையைக் கொஞ்சிடப் பாடிடுமே
பிள்ளைகளுடனே பாடிடுமே  
உரிமையைக் காக்கப் பாடிடுமே
உணவினைக் கண்டால் பாடிடுமே

ஆபத்து வந்தால் பறந்தோடித்
தப்பிச் சென்றிட ஒரு பாட்டு
உறவுகளோடு கூடிடவே
அதற்கென பாடும் தனிப்பாட்டு

குஞ்சுகளுக்கு இரையூட்டக்
குஷியாய்ப் பாடும் ஒரு பாட்டு
கோபம் தாபம் கொண்டாலோ
கொதித்து எழுமே ஒரு பாட்டு

பறவைகள் பாடும் பாட்டினிலே
அடடா! எத்தனை பொருள் இருக்கு
வெறும் குரல் எழுப்புது என்றிருந்தேன்
விஷயங்கள் எதனை மறைந்திருக்கு?

Wednesday, May 23, 2018

எனக்குப் பிடித்த இனிப்பெது?

எத்தனையோ இனிப்புக்கள்
கடையில் விற்குது, ஆயினும்
என்றும் எனக்குப் பிடித்தது
இனிமை மிக்க ஜாங்கிரி

தங்கமான கைகளால்
எங்கள் தந்தை செய்தது
தங்கம் போல மினுக்குமே
திங்கத் திங்க ருசிக்குமே

ஊற வைத்து உளுந்தினை
உரலில் பதமாய் அரைக்கிறார்
அரைத்த உளுந்து மாவினை
ஜாங்கிரிக் குட்டையில் எடுக்கிறார்

வட்டம் இரண்டு சுற்றியே
வளையம் வளைய மாகவே
சுற்றிச் சுற்றிச் சங்கிலிபோல்
வடிவமைத்துக் கொள்கிறார்

அடுப்பில் எண்ணெய் காயுதே
அழகாய் ஜாங்கிரி குதிக்குதே
பதமாய் வெந்த ஜாங்கிரி
சர்க்கரைப் பாகில் மிதக்குதே

வட்ட மான தட்டிலே
வட்ட வடிவில் ஜாங்கிரி
எட்டி எட்டிப் பார்ப்பதேன்?
கிட்ட வந்தால் தருகிறேன்


Saturday, May 19, 2018

நவீன வண்டி





நவீன வண்டி, மெட்ரோ வண்டி
நகரத்தை முழுவதும் இணைக்கும் வண்டி
சப்தம் மிகவும் செய்திடாமலே
சாந்தமாகச் செல்லும் வண்டி

சிலசில பொழுது பாலத்தின் மேலே
சிலசில பொழுது சுரங்கத்தின் வழியே
கிடுகிடுஎன்று போகும் வண்டி
ஊருக்கு அழகைக் கூட்டும் வண்டி

புகையை வெளியே விடாத வண்டி
சுற்றுச் சூழலைக் காத்திடும் வண்டி
இங்கும் அங்கும் பார்த்து கொண்டே
சுகமாய்ச் செல்ல உதவும் வண்டி

எங்கள் ஊரின் மெட்ரோ வண்டி
எத்தனை பேரை கூட்டிப் போகுது
உங்கள் ஊரில் உண்டோ இதுபோல்                
சொகுசாய்ச் செல்லும் மெட்ரோ வண்டி?

Wednesday, May 16, 2018

வண்டுகளோட பாட்டுக் கச்சேரி




பூமியில் இருந்த தண்ணீர் எல்லாம்
வானத்தைத் தொட்டிட நினைத்ததே
சூரியக் கதிர்களில் பயணம் செய்தே
மழை தரும் மேகமாய் மாறியதே

"அம்மா அம்மா பூமிகக்குப் போகணும்"
என்றது மழை தரும் மேகங்கள்
அம்மா மேகமும் சின்ன மேகங்களும்
மழையைப் பொழிந்தது பூமியிலே

பூமி நனைந்தது புற்கள் முளைத்தது
பூக்கள் பூத்தது செடிகளிலே
வண்டுகளோட பாட்டுக் கச்சேரி
பலமாய் நடக்குது தோட்டத்திலே

Saturday, May 12, 2018

தொட்டால் சுருளும் ரயில் வண்டி


சுக்கு புக்கு சத்தம் போடாமலே
குப் குப்புகையை விடாமலே
தோட்டத்தில் ஓடுது ரயில் வண்டி - இது
தொட்டால் சுருளும் ரயில் வண்டி

சிகப்புக் கொடியைக் கண்டாலும்
திகைத்துப் பயந்து நிற்காது
பச்சைக் கொடியைப் பார்த்தாலும் - இது
பரபரப்புடனே ஓடாது

எத்தனை பெட்டிகள் இருந்தாலும்
எவரையும் ஏற்றிச் செல்லாது
காட்டிலும் மேட்டிலும் சென்றிடுமே  
கண்ணைக் கவரும் ரயில் வண்டி

தண்டவாளம் இல்லாமலே
தரையில் ஊர்ந்து செல்லுது பார்
மரவட்டை என்னும் ரயில் வண்டி - நம்
மனதைக் கவரும் ரயில் வண்டி 

சாய்ந்தாடும் குதிரை

தாத்தா தந்த குதிரைமேல்
தாவிக் குதித்து ஏறிடுவேன்
முரண்டுத் தானங்கள் செய்யாது
முன்னும் பின்னும் ஆடிடுவேன்

குதிரை மேலே ராஜாபோல்
கம்பீரமாக அமர்ந்திடுவேன்
டக்-டக்  டக்-டக் என்றே சுற்றிச்              
சவாரி எங்கும் செய்திடுவேன்



அழகுத் தங்கைப் பாப்பாவை
அன்புடன் ஏற்றிக் கொண்டே நான்
பாரில் உள்ள இடமெல்லாம்
பார்த்துக் களித்துத் திரும்பிடுவேன்

புல்லும் கொள்ளும் தின்னாது
என்னைப் பிரிந்து  செல்லாது
சன்னப்  பட்டின ஊரினிலே
சிறப்பாய்ச் செய்த குதிரை இது

Thursday, May 10, 2018

கடிகாரம்


கடிகாரம் நல்ல கடிகாரம்
கையில் கட்டும் கடிகாரம்
வான வில்லின் வண்ணங்களில்
வகை வகையான கடிகாரம்

எடுத்தே கையில் கட்டிடுவேன்
எங்கும் மிடுக்காய்ச் சுற்றிடுவேன்
எவரும் என்னிடம் மணிகேட்டல்
உடனே அன்புடன் சொல்லிடுவேன்

நேரத்தோடு வாழ்க்கையிலே
எல்லா வேலையும் செய்திடுவேன்
பொன்னைப் போன்ற நேரத்தைக்
கண்கள் போலப் போற்றிடுவேன்

ஒன்றன் பின்னே ஒன்றாக
ஓடிப் பிடிக்கும் முள்ளிரண்டு
ஓடிப் பிடித்து விட்டாலோ
அடடா! மணியோ பன்னிரெண்டு

தபக்கனார் தபக்கனார்


"தபக் தபக்" என்று தரையில்
தத்தித் தத்திச் செல்வதால்
தவளையரை எங்கள் பாப்பா
அழைக்கும் பெயர் "தபக்கனார்"

தபக்கனார் தபக்கனார்
தரையில் தத்திச் செல்லுவார்
தண்ணீரைப் பார்த்து விட்டால்
தாவி நீச்சல் போடுவார்

Saturday, May 5, 2018

பலாமரம் பலாமரம்


பலாமரம் பலாமரம்
பலகிளைகள் இருக்கும் மரம்
பச்சைவண்ண பலாப்பழம்
காய்த்துக் காய்த்துக் கொட்டும் மரம்

தேனைப்போலத் தித்திப்பான
சுளைகள்யாவும் பத்திரமாய்
பானைபோன்ற வயிற்றுக்குள்ளே
பாதுகாத்து வைக்கும் மரம்
                                                       
பக்குவமாய்ச் சமயல்செய்யப்
பலாக்காய்கள் கொடுக்கும் மரம்
விதவிதமாய் இசைக்கருவிகள்
விரும்பித் தச்சர் செய்யும் மரம்

Wednesday, May 2, 2018

காற்றே நீ


உருவம் உனதைக் காட்டாமல்
உயிராய் எமக்குள் ஒளிர்கின்றாய்
அருவம் ஆகி இருந்தும் நீ
அழகாய்க் காதில் ஒலிக்கின்றாய்

மொட்டுக்குள்ளே ஊடுருவி
மெல்லப் பூவாய் மலர்கின்றாய்
தொட்டுக் கடலின் அலைகளையே
தூக்கிக் கீழே விடுகின்றாய்

புல்லில் அசைவதும் நீயேதான்
புவியும் உயிர்ப்பது உன்னால்தான்
நீல வானில் பறவைகளும்
சிறகை விரிப்பதும் உன்னால்தான்

கண்ணன் வாயில் வேய்ங்குழலின்
நுண்ணிய துளைகள் வழியாலே
பண்ணிய பாடல்கள் காதினிலே
பாயுது பாயுது தேன்போலே

பொறுமை கொண்ட போதினிலே
பொதிகைத் தென்றல் போல்வருவாய்
பொங்கி எழுந்து விட்டாலோ
புயலாய் நீயும் மாறிடுவாய்

காற்றே உன்னை என்றேனும்
காண்பேனோ நான் கண்ணாலே?
கேட்பேன் கேள்விகள் பல நூறு
சொல்வாயோ பதில் தன்னாலே?

மொழி



கொஞ்சும் கிளி பறந்து வந்து
மா மரத்தில் அமர்ந்தது
'குக்கூ குக்கூ' என்று கூவிக்
கொஞ்ச நேரம் இருந்தது

சின்னக் குயில் கிளியின் அருகில்
கூடிப் பேச வந்தது
'கிக்கீ கிக்கீ' என்று பேசி
ஏதோ செய்தி சொன்னது

சின்னஞ் சிறிய சிட்டுக்குருவி
தென்னங் கீற்றில் அமர்ந்தது
'கா-கா கா-கா' என்று கரைந்து
களிப்பு  மிகவும் கொண்டது

கன்னங் கரிய காக்கை சின்னக் 
குருவி அருகில் வந்தது
'கீச்சு கீச்சு' என்று கத்தி
விரைந்து வானில் பறந்தது

சின்னக் குயில், சிட்டுக் குருவி
பச்சைக் கிளியும் காக்கையும்
சொந்த மொழியை மறந்ததா?
சற்றும் இல்லை இல்லையே

வேறு வேறு மொழியைத் தினமும்
விரும்பி விரும்பிப் படித்ததே
விரும்பிப் படித்த மொழியைப் பழகத்
திரும்பத் திரும்பச் சொன்னதே