Photo by David Boozer from Pexels
சிறுவன்:
சின்னஞ் சிறிய சிலந்தியே
உன்னை எண்ணி வியக்கிறேன்!
எத்தனை அழகு உன் வலை!
எங்கே கற்றாய் இந்தக் கலை!
சிலந்திப்பூச்சி:
உள்ளத் தூய்மையோடு நீ
உவந்து கேள்வி கேட்கிறாய்
அருகில் வந்தால் ரகசியம்
காதில் சொல்வேன், நிச்சயம்
எந்தன் வயிற்றில் ஒரு திரவம்
என்றும் செய்வேன் உற்பத்தி
திரவம் இதனால் பின்னிடுவேன்
எழிலாய் வலைஎன் னைச்சுற்றி
திரவம் அதனை இழுப்பதினால்
இழைகள் அழகாய் உருவாகும்
இருக்கும் அவையும், நூலைப்போல்
இழுத்தால் இரும்புக்கு நிகராகும்
வலையில் சில நேர் கோடுகளே
வருவேன், போவேன், அதன் மேலே
வலையில் அதிர்வுகள் ஏற்பட்டால்
வந்தது உணவு, என்றறிவேன்
சிக்கிய பூச்சியைச் சுற்றிடுவேன்
நூல்போல் செய்த இழையாலே
சுற்றிப் பின்னர் புசித்திடுவேன்
சுவையை மகிழ்ந்து ரசித்துடுவேன்
பட்டுப் புழுவின் கூட்டைப்போல்
கட்டிடுவேன் நான், ஒரு கூடு
முட்டைகள் இட்டுக் கூட்டுக்குள்
பத்திரமாய் நான் காத்திடுவேன்
முட்டைகள் பொரிந்து பூச்சிகளும்
முழுதாய் வெளியில் வந்திடுமாம்
நூலிழை பற்றிக் காற்றோடு
நூறு மைல்கள் சென்றிடுமாம்
பயிர்களை நாசம் செய்கின்ற
பூச்சிகள் பிடித்தே தின்றிடுவேன் - நோய்க்
கிருமிகள் பரப்பும் பூச்சிகளை
நொடியில் பிடித்துக் கொன்றிடுவேன்
சிறுவன்:
சிறுவன் எந்தன் கேள்விக்குச்
சிறப்பாய் பதிலைத் தந்தாயே!
சிலந்திப் பூச்சியே, உன்னை
நான்
சிநேகிதன் ஆக்கிக் கொண்டேனே!