Sunday, June 17, 2018

காகமும் நரியும்

காகமும் நரியும்

பசி மிகுந்த காகம் ஒன்று
பாட்டி கடைக்கு வந்தது
அன்புடனே பாட்டி தந்த
வடையைக் கவ்விச் சென்றது 

காக்கை வாயில் வடையினைக்
குள்ள நரியும் பார்த்தது
தட்டி வடையைப் பறித்திடத்
திட்டம் ஒன்று போட்டது

"பாட்டு ஒன்று பாடு" என்று
நரியும் அதனை கேட்டது
காக்கை வடையைக் காலில் பற்றிக்
'கா கா' 'கா கா' என்றது\

குயிலைப் போல இனிய குரலில்
பாட்டுப் பாடும் காக்கையே
மயிலைப் போல நடனம் ஆடு
என்று நரியும் கேட்டது

தந்திரமாய்த் தட்டி வடையைப்
பறிக்க நினைத்த நரியினைத்
தந்திரத்தால் வெல்லக் காக்கை          
யுக்தி ஒன்று செய்தது

வாயில் வடையைக் கவ்விக் கொண்டு
வட்டமிட்டுத் திரிந்தது
'தை தை' என்று ஆட்டம் ஆடிக்
கிளையில் ஜோராய் அமர்ந்தது
  
வஞ்சம் செய்த நரியின் முகமோ
கொஞ்சம் தொங்கிப் போனது
புத்திசாலிக் காகம் வடையைக்
கொத்திக் கொத்தித் தின்றது

No comments:

Post a Comment